sutharsan  
க்ரைம்

“15 வயது பள்ளி மாணவி கர்ப்பம்” - காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்… திருவண்ணாமலையில் பரபரப்பு!

சுதர்சன் சிறுமியுடன் நெருக்கமாக பழகி அடிக்கடி இருவரும் வெளியில் சுற்றி வந்த நிலையில்...

Mahalakshmi Somasundaram

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி , அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில், வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதுடைய சுதர்சன் என்பவருக்கும், அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பேசி பழகி வந்த நிலையில் அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறி காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சுதர்சன் சிறுமியுடன் நெருக்கமாக பழகி அடிக்கடி இருவரும் வெளியில் சுற்றி வந்த நிலையில், ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்த போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நடந்த சம்பவம் குறித்து மாணவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சுதர்சன் தன்னை காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுமி தெரிவித்துள்ளார். எனவே, இது குறித்து மாணவியின் பெற்றோர் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், 15 வயது சிறுமியை சுதர்சன் காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சுதர்சனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 20 வயது வாலிபர் 15 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக சொல்லி கர்ப்பமாக்கிய சம்பவம், வந்தவாசி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்