விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பில்ராம்பட்டு கிராம பகுதியில் கடந்த (மார்ச் 07) ஆம் தேதி காலை சவுக்கு தோப்பு ஓடையில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தேக மரணம் என முதலில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் உடற்கூறு ஆய்வின் போது, சடலத்தில் பல்வேறு இடங்களில் வெட்டி காயங்கள் இருந்தது தெரிய வந்தது.
எனவே போலீசார் சந்தேக மரணம் என பதிவு செய்து இருந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர். இதற்காக மூன்று உதவி ஆய்வாளர்கள் உட்பட 12 பேர் கொண்ட நான்கு தனிப்படைகளை அமைத்து உயிரிழந்தவர் யார்?கொலைக்கான காரணம் என்ன? குற்றவாளிகள் யார்?என்பது குறித்து விசாரணையை தீவிர படுத்தினார்.தனிப்படை போலீசார் அந்தப் பகுதிகளில் இருந்த 20க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடந்த மூன்றாம் தேதி இரவு ஆட்டோ ஒன்றிலிருந்து நபர் ஒருவர் தொப்பி அணிந்து கொண்டு கொலை நடந்த இடத்திற்கு செல்வது தெரியவந்தது.
இதன் காரணமாக சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவின் பதிவெண் அடிப்படையில் விசாரணை செய்ததில், கண்டாச்சிபுரம் பகுதியில் இருந்து பில்ராம்பட்டு நோக்கி ஆட்டோ வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து ஆட்டோ உரிமையாளரை பிடித்து விசாரணை செய்தபோது நபர் ஒருவர் பில்ராம்பட்டு செல்ல வேண்டுமென கேட்டதாகவும் சவாரி ஏற்றிகொண்டு வந்ததாகவும் வ கூறியுள்ளார். மேலும் பயணத்திற்கான கட்டண தொகையை அவர் ஜிப்பே (Gpay) மூலம் செலுத்தியதாக போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வசதியுடன் Gpay வில் பணம் அனுப்பிய செல்போன் எண் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த எண்ணானது திருநெல்வேலி மாவட்டம் நம்பிக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் உடையது என தெரியவந்தது. அவர் சினிமாக்களில் வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பது மற்றும் குறும்படங்கள் இயக்கி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிர படுத்தியதால் திருமணமாகி விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்த ஜெயக்குமாருக்கும் 23 வயதுடைய பூஜாவிற்கு பழக்கம் இருந்தது தெரியவந்தது.
பின்னர் பூஜாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளாக பூஜாவும் ஜெயகுமாரும் நெருங்கி பழகி வந்த நிலையில் அவ்வப்போது பூஜா தனது செலவிற்காக ஜெயகுமாரிடம் பணம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜெயக்குமார் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பூஜாவிடம் தெரிவித்த போது அதற்கு பூஜா மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் தன்னிடம் வாங்கிய மொத்த பணத்தையும் திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் அச்சமடைந்த பூஜா தனது முன்னாள் காதலனாக தேவாவிடம் இது குறித்து கூறியுள்ளார்.
எனவே தேவா, பூஜா ஆகிய இருவரும் தங்களது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து ஜெயக்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு பில்ராம்பட்டு பகுதிக்கு ஜெயக்குமாரை கடந்த மூன்றாம் தேதி இரவு வரவழைத்து, திட்டமிட்டபடி துர்காவும் ஐயப்பனும் ஜெயக்குமாரை பூஜா இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி சவுக்கு தோப்பிற்கு அழைத்துச் சென்று அங்கு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயக்குமாரின் தலை, கழுத்து மற்றும் உடம்பில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. சவுக்கு தோப்பில் இயக்குனர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.