க்ரைம்

கணவனை கழுத்தை நெறித்து கொன்ற மனைவி...! கள்ளக்காதலனுடன் அதிரடி கைது!!

கணவனை கழுத்தை நெறுக்கி கொலை செய்த மனைவி கள்ளகாதலனுடன் கைதான சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது.

Tamil Selvi Selvakumar

சேலம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியை சேர்ந்தவர் ஜீவா - கவிதா தம்பதி. தச்சு தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், ஜீவா மதுவுக்கு அடிமையாகி இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி வழக்கத்தை விட அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற ஜீவா, வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பின்னர் இது குறித்து மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜீவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது கவிதா, மதுபோதையில் இருந்த ஜீவா, கீழே தவறி விழுந்து இறந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பிரேத பரிசோதனையில் ஜீவாவின் முகம், வாய், கழுத்து பகுதியில் காயங்கள் உள்ளதாக ரிப்போர்ட் கூறியது. இதனையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கவிதா மீதும், ஜீவாவின் நண்பரான ராஜா என்பவரது மீதும் சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, இருவரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரின் கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்ததால் ஜீவாவை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் தெரிவித்தபோது, ராஜாவும், ஜீவாவும் நெருங்கிய நண்பர்கள், அதனால்  ஜீவா வீட்டிற்கு ராஜா அடிக்கடி வந்துள்ளார். இதற்கிடையில் ராஜாவுக்கும், ஜீவா மனைவி கவிதாவிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளகாதலாக மாறி, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

பின்னர் இந்த கள்ளக்காதல் குறித்து அறிந்த ஜீவா, கவிதாவை கண்டித்து வந்துள்ளார். இதனால் ஜீவாவை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவுசெய்தனர். இதனிடையே தான் கடந்த 16-ந் தேதி இரவு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு ஜீவா வீட்டுக்கு வந்தபோது, அங்கு கவிதாவும், ராஜாவும் உல்லாசமாக இருந்ததை கண்டு சத்தம்போட்டு கத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜீவாவின் வாய், மூக்கை துணியால் அமுக்கி,  மற்றொரு துணியால் அவருடைய கழுத்தை நெரித்துள்ளனர். இதில் மூச்சுத்திணறி ஜீவா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தங்கள் மீது உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வராமல் இருக்க அவர் தவறி விழுந்து இறந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக வாக்குமூலத்தில் அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, கவிதா, ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.