க்ரைம்

அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி நடிகர், நடிகை, தொழிலதிபர்களின் கோடி கணக்கான கருப்பு பணத்தை சுருட்டிய பெண் கைது...

ஐதராபாத்தில் அதிக வட்டி கொடுக்கிறேன் என்று ஆசை காட்டி சினிமா நடிகர்கள், நடிகைகள், பைனான்சியர்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் என பலரிடம்  200 கோடி ரூபாய் வரை வாங்கி மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டார். 

Malaimurasu Seithigal TV

ஐதராபாத்தில் உள்ள நர்சிங்கி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஷில்பா. அங்கு சிறு அளவிலான வியாபாரங்களில் ஈடுபட்டு வந்த ஷில்பாவுக்கு திரைத்துறையை சேர்ந்தவர்களின் தொடர்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த திரைத்துறை தொடர்பை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க முடிவு செய்து ஷில்பா அதிக வட்டி கொடுக்கிறேன் என்று கூறி சினிமா நடிகர்கள், நடிகைகள், பைனான்சியர்கள், அதிகாரிகள் ஆகியோரிடம் சுமார் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஷில்பாவிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பெரும்பாலானோர் தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஷில்பாவிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது தன்னிடம் பணமே கிடையாது என கூறியுள்ளார். அதனால் மோசடி செய்து வசூலித்த பல கோடி ரூபாய் பணத்தை என்ன செய்தார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.