கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (23). அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (25) என்ற இளைஞர் மருந்தகத்திற்குள் நுழைந்து திவ்யாவை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த திவ்யா ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து, பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்த திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, பெண் ஊழியரை கத்தியால் குத்தியதாக கூறப்படும் சந்தோஷை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் ஊழியரை கத்தியால் குத்தியதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளது என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது, பட்டப்பகலில் மருந்தகத்திற்குள் புகுந்து பெண் ஊழியர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்