மாவட்டம்

பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை...! சாலையில் வீசி சென்ற சம்பவம்...!

திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகே பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மர்மநபர்கள் சாலையோரத்தில் வீசி சென்ற சம்பவம்

Malaimurasu Seithigal TV

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் புகழ்பெற்ற தசரா திருவிழா நடைபெற்று வருகிறது. தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை நடைபெற உள்ளது. அதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் முத்தாரம்மன் கோவிலில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் உள்ள மாடசாமிபுரம் அருகே சாலையோரத்தில் பிறந்து 15 நாட்களான பச்சிளம் பெண் குழந்தையை துணியில் சுற்றி வீசி சென்றுள்ளனர். 

அப்போது, குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைக்கு தேவையான சிகிச்சையளித்து பராமரித்து வருகின்றனர். தற்போது தசரா திருவிழா நடைபெற்று வருகிற நேரத்தில் கோவில் அருகே குழந்தையை விட்டுச் சென்ற மர்ம நபர்கள் குறித்து குலசேகரன்பட்டினம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.