மாவட்டம்

தண்ணீர் தேடி சென்ற மான் வாகனத்தில் மோதி பலி...

வனப்பகுதிகளில் கட்டப்பட்ட தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்காததால் தண்ணீரை தேடி பிரதான சாலைகளுக்கு வந்து மான்கள் விபத்துக்கு உட்படுகின்றன.

Malaimurasu Seithigal TV

தேனி | ஆண்டிப்பட்டி தாலுகா, கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கடமலைக்குண்டு  பகுதியில் உள்ள அய்யனார்கோவில் மலைப்பகுதியில் கடமான், புள்ளிமான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளது. வைகை ஆற்றை ஒட்டியுள்ள இந்த பகுதியில் வனவிலங்குகள் அடிக்கடி தண்ணீர் குடிக்க ஆற்றுக்கு வருவது வழக்கம்.

ஆனால், மலையில் இருந்து ஆற்றுப்பகுதிக்கு வரும் வனவிலங்குகள் சாலையை கடக்கும்போது தொடர்ந்து விபத்துகளுக்கு உட்பட்டு பலியாகி வருகின்றன. குறிப்பாக மான்கள் அதிகமாக வாகனங்களில் அடிபட்டு வருகிறது. இதுவரையில் இந்த அய்யனார்கோவில் மலைப்பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட மான்கள் வாகனங்களில் அடிப்பட்டு இறந்துள்ளது.

மனிதர்களுக்கு பயந்து வனவிலங்குகள் அப்பகுதியில் குறைவாக வந்தாலும், தற்போது, வைகை ஆறு வெப்பக்காலம் காரணமாக வறண்டு போய் இருப்பதால், ஆறு மணல்மேடாக காட்சியளிக்கிறது. அதனால், தன்னுயிர் தேடி சாலைகளுக்கு வரும் மிருகங்களும் விபத்துக்குள்ளாகின்றன.

அப்படி, அய்யனார்கோவில் மலைப்பகுதியில் இருந்து தண்ணீரை தேடி வந்த 3 வயதுடைய ஒரு புள்ளிமான் சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிய அந்த மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மான் பரிதாபமாக இறந்தது.

தண்ணீரை தேடி வந்து விபத்தில் சிக்கி மான்கள் இறப்பது அதிகரித்ததை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதயில் 3 இடங்களில் பெரிய தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டது. ஆனால் அதில் முறையாக தண்ணீர் நிரப்பாத காரணத்தால் விபத்தில் சிக்கி மான்கள் இறப்பது தொடர்கதையாகி உள்ளது. காட்சிப்பொருளாக காணப்படும் இந்த தண்ணீர் தொட்டிகளில் மழைநீர் மட்டுமே குப்பை கூலங்கள் நிறைந்து, குறைந்த அளவு தண்ணீர் துர்நாற்றத்துடன் தேங்கியுள்ளது. 

சுட்டெரிக்கும் வெயிலால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால், அதிகமான வனவிலங்குகள் கடமலைக்குண்டு வனப்பகுதியில் பயன்பாடின்றி காணப்படும் தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வைக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.