மாவட்டம்

“இங்கேயே இருந்தால் நான் இறந்து விடுவேன்” - உடல் முழுவதும் காயத்துடன் வீடியோ.. சவுதியில் சிக்கிய கணவரை மீட்டுத்தர மனைவி கோரிக்கை!

அந்த ஒப்பந்தத்தில் எனது கணவருக்கு பேக்கிங் (PACKING) பணி தரப்படும் என கூறப்பட்டிருந்தது. அதனை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற

Mahalakshmi Somasundaram

ராணிப்பேட்டை மாவட்டம்,  அரக்கோணத்தை சேர்ந்தவர் கரிமுல்லா. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கரிமுல்லா முதல் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கரிமுல்லா தனது குழந்தையின் மருத்துவ செலவிற்கு சம்பாதிக்கும் நோக்கத்தில்  வேலூரில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் வெளிநாட்டில் வேலைக்கு  சென்றுள்ளார். வேலூர் கஸ்பா பகுதியில் உள்ள நிசாம் அஸ்லம் என்பவர் கரிமுல்லாவை பேக்கிங்(PACKING) வேலைக்கு என அனுப்பிவைத்துள்ளார். 

சவுதி அரேபியாவுக்கு சென்ற கரிமுல்லாவிற்கு பேக்கிங் வேலை கொடுக்கப்படாமல் கழிவறை சுத்தம் செய்யும் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் உடல் முழுவதும் அழற்சி ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தனது மனைவியிடம் பேசிய கரிமுல்லா “என்னை இங்கு கொடுமை செய்கிறார்கள் எனக்கு உடம்பு எல்லாம் காயமாகியுயள்ளது, தயவு செய்து என்னை மீட்கும் வழியை தேடுங்கள், இங்கேயே இருந்தால் நான் இறந்துவிடுவேன்” என கூறியுள்ளார். எனவே கரிமுல்லாவின் மனைவி வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் கணவனை மீட்டு தரக்கோரி அரக்கோணம் போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில் “எனது கணவர் கரிமுல்லா அவருக்கு 28 வயதாகிறது.  என இவர்  கடந்த சில மாதங்களுக்கு முன் வேலூர் கஸ்பா பகுதியில் இயங்கி வரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தரும் தனியார் ஏஜென்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் சவுதி அரேபியாவுக்கு சென்றார். அந்த ஒப்பந்தத்தில் எனது கணவருக்கு பேக்கிங் (PACKING) பணி தரப்படும் என கூறப்பட்டிருந்தது. அதனை நம்பி வெளிநாட்டிற்கு சென்ற எனது கணவருக்கு கழிவறை தூய்மை செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பணிகளை செய்ய முடியாமல் ஒவ்வாமை ஏற்பட்டு உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டு அவதிப்படுவதாக எனது கணவர் தினமும் போன் செய்து கண்ணீர் விட்டு அழுகின்றார்” என அந்த மனுவில் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அதிமுகழக செயலாளரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவியிடமும் தனது கணவரை மீட்டுத் தருமாறு கோரிக்கை மனு அளித்தார். இந்த புகார் மனுவை அரக்கோணம் காவல் துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து கரிமுல்லாவை மீட்டுத்தர உதவுவதாக கூறியுள்ளனர். கரிமுல்லாவின் இந்த நிலையை பார்த்து அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.