மாவட்டம்

இழப்பீடு கொடுக்காத காரணத்தால், பேருந்து ஜப்தி...

விபத்து ஏற்படுத்திய வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதித்து இழப்பீடு வழங்காத போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் | கொடைக்கானல் வடகவுஞ்சி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இவருக்கு பொன்னுத்தாய் என்ற மனைவியும் சதீஷ்குமார் என்ற மகன் மற்றும் சங்கீதா என்ற மகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2016ம்ஆண்டு வடகவுஞ்சி சாலையில் சென்ற போது கொடைக்கானலில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் பழனிச்சாமி படுகாயமடைந்தார். இதுகுறித்து வழக்கு பழனி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.  இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பழனிச்சாமிக்கு 6லட்சத்து 4ஆயிரத்து 860 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென கடந்த 2019ம்ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இழப்பீடு வழங்காமல் போக்குவரத்து கழகம் காலம் தாழ்த்தி வந்த நிலையில், விபத்தில் படுகாயமடைந்து பாதிக்கப்பட்ட பழனிச்சாமியும் உயிரிழந்தார். இதை எடுத்து பழனிச்சாமியின் குடும்பத்தினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தனர்.

இதனையடுத்து பழனிச்சாமி குடும்பத்தினருக்கு அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து 8லட்சத்து 27ஆயிரத்து 211ரூபாயை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும், அதுவரை அரசு பேருந்தை ஜப்தி செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி பழனி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த கோவை மண்டல அரசு போக்குவத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பேருந்து ஒன்றை நீதிமன்ற ஊழியர்கள் ஐப்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் பழனி பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.