மாவட்டம்

புயலால் ஏற்பட்ட சேதம்...! செல்போன் டவர் சரிந்து விழுந்து விபத்து...!

Malaimurasu Seithigal TV

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை வீசி கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது சென்னையில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. புயல் காரணமாக வீசிய சூறைக்காற்றால் சென்னை மட்டுமல்லாது, சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்ததுடன், வீட்டின் கூரைகளும் பெயர்ந்து விழுந்து சேதமடைந்தது. 

இந்நிலையில் சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் நேற்று பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றின் காரணமாக வலுவிழந்த நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை சுமார் 7.30 மணி அளவில் அந்த செல்போன் டவரானது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. 

இச்சம்பவம் தொடர்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சரிந்து விழுந்த செல்போன் டவரை அகற்றி அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் இன்று காலை அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.