மாவட்டம்

பாரம்பரிய கலைகளில் ஆஸ்கார் உலக சாதனை படைத்த கோவை மாணவர்கள்...

Malaimurasu Seithigal TV

கோவை | சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தில் தமிழ் பாரம்பரிய கலைகள் குறித்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் முல்லை தற்காப்பு கலை பயிற்சி கழகத்தின் நிறுவனரான பிரகாஷ்ராஜ் தனது மாணவ, மாணவிகளை தொடர்ந்து பல உலக சாதனைகள் புரிய ஊக்குவித்து வருகிறார்.

இந்நிலையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, முல்லை பயிற்சி கழகத்தை சேர்ந்த 33 மாணவ,மாணவிகள் புதிய உலக சாதனை நிகழ்வை அரங்கேற்றியுள்ளனர். இதற்கான நிகழ்ச்சி குரும்ப்பாளையம் ஆதித்யா சர்வதேச பள்ளி அரங்கில் நடைபெற்றது.

இதில் 33 பேர் இணைந்து ஒரே நேரத்தில்  தமிழ் பாரம்பரிய தற்காப்பு கலை ஆயுதங்களான சுருள் வாள், மான் கொம்பு, ஒற்றை மற்றும் இரட்டைசிலம்பம்,வாள் வீச்சு, வேல் கம்பு என ஆறு விதமான தமிழர்களின் கற்கால ஆயுதங்களை தொடர்ந்து மூன்று மணி நேரம் பதினைந்து நிமிடங்கள் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

தொடர்ந்து சாதனை மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ்கள்,கேடயங்களை,  ஆஸ்கர் சாதனை புத்தகத்தின் நிறுவனர் பதிப்பாளர் கதிரவன்,மற்றும் தமிழ்நாடு தீர்ப்பாளர்கள் சுரேஷ், ஆனந்தகுமார், பிரகாஷ்ராஜ் ஆகியோர் வழங்கி கவுரவித்தனர்.

மகளிர் தினத்தை போற்றும் விதமாக, ஒரே நேரத்தில் சுமார் ஐந்து வயது முதல் 12 வயது வரையிலான மாணவ,மாணவிகள் அரங்கில் தமிழர்களின் கற்கால ஆயுதங்களை இணைந்த அசத்தலாக சுற்றியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.