மாவட்டம்

போதை விழிப்புணர்வு..சித்திரகுப்தன் வேடமணிந்து சவப்பெட்டியுடன் வலம் வந்த இளைஞர்கள்...

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் போதைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சித்திரகுப்தன் வேடமணிந்து கையில் சவப்பெட்டியுடன் சாலையில் வலம் வந்த இளைஞர்கள்.இத்தகைய புதிய முயற்சியை பொதுமக்கள் வரவேற்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்தவர்கள் ஜெனிஸ்,சுமிஷ்.பட்டதாரியான இவர்கள் இருவரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை செய்து வருகின்றனர்.அதன்படி வரதட்சணை கொடுமை மற்றும் வரதட்சணை ஒழிப்பு குறித்து குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மணமகன் வேடமணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .இதேபோன்று பிளாஸ்டிக் ஒழிப்பு உட்பட பல்வேறு மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

 இந்த நிலையில் வாலிபர்கள் இருவரும் போதைக்கு அடிமையாகி வருவதை தடுக்கும் விதமாகவும் ,இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இருவரும் சித்திரகுப்தன் வேடம் அணிந்து "சிரிப்போம் சிந்திப்போம்" என்ற நோக்கத்தில் போதை இளைஞர்களை எமலோகத்திற்கு அழைத்து செல்வதாக கூறி தலையில் சவப்பெட்டியுடன் நாகர்கோவிலில் சாலையில் விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொண்டனர். இதுகுறித்து வாலிபர் ஜெனிஸ் கூறும்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, காவல்துறையும் அதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் இளைஞர்களை நீக்க வேண்டும் எனவும் , மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் போதைக்கு அடிமையானவர்களை எமலோகம் அழைத்து செல்வதற்காக கையில் சவப்பெட்டியுடன் இந்த நிகழ்ச்சியை நடத்துவதாக தெரிவித்தார். குமரி மாவட்டத்தில் ஆரம்பித்த இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெறும் என்று அப்போது அவர் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.