மாவட்டம்

பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்...

அந்தியூர் நீர்நிலைப் பகுதிகளில் இன்று ஒருநாள் முழுவதும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி வனச்சரகர் உத்ராசாமி தலைமையில் தொடங்கியது.

Malaimurasu Seithigal TV

ஈரோடு | அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வரட்டுபள்ளம் அணை, அந்தியூர் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம்  ஏரி உள்ளிட்ட நீர்நிலைப் பகுதிகளில் வனச்சரகர் உத்ராசாமி தலைமையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று காலை தொடங்கியது.

இன்று காலை மட்டும் வரட்டு பள்ளம் அணைப்பகுதியில் பாம்புண்ணி கழுகு, தடித்த அழகு மீன்கொத்தி, வானம்பாடி, ஊசிவாள் வாத்து, மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, தேன் பருந்து குக்ருவாள், இருவாச்சி, செந்நீல கொக்கு, மரகத புறா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பறவைகள் தென்பட்டன.

குறிப்பாக இமயமலை பகுதியில் இருக்கும் வெர்டிட்டர் பிளைட் கேட்ச்சர் பறவை அந்தியூர் வனப்பகுதியிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான பறவைகள் அந்தியூரின் நீர்நிலை மற்றும் வனப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று ஒரு நாள் முழுவதும்  பறவை ஆர்வலர்கள் உடன் இணைந்து வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுக்கும் பணியினை மேற்கொள்ள உள்ளனர்.