மாவட்டம்

ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதம்... பொதுமக்கள் பதற்றம்...

நாமக்கல்லில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சேகர். இவர் இன்று மோகனூருக்கு தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேருடன் ஆம்னி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லிபாளையம் பகுதியில் காருக்கு கேஸ் நிரப்பி விட்டு காரை ஸ்டார்ட் செய்ய முயன்ற போது கார் ஸ்டார்ட் ஆகவில்லை.

இதனால் அவரது குடும்பத்தினர் காரை தள்ளி கொண்டு சிறிது தூரம் சென்றனர். அப்போது திடீரென காரின் பின்புறத்தில் இருந்து தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சேகர் காரை விட்டு இறங்கி நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

பின் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக சேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.