மாவட்டம்

ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து நூதன போராட்டம்...

Malaimurasu Seithigal TV

உதகை அருகே உள்ள தட்டனேரி கிராமத்தில் இந்து மலை வேடன் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்காததை கண்டித்து தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

நீலகிரி மாவட்டம் :

 உதகையை அடுத்த தட்டனேரி கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட இந்து மலை வேடன் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1993ம் ஆண்டுக்கு முன்பு வரை பழங்குடியினர் என்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் பல்வேறு காரணங்களுக்காக தற்போது வரை இந்து மலை வேடன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் பட்டியலில் ஜாதி சான்றிதழ் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஊராட்சி மன்ற தேர்தலில் இதே சமூகத்தை சேர்ந்த திமுக சந்தோஷ் குமார் என்பவர் இந்து மலை வேடன் சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு பழங்குடியினர் என்று ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து தேர்தலிலும் வெற்றி பெற்று  ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இதுவரை ஊராட்சி மன்ற தலைவரோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ இந்து மலை வேடன் சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் இருந்து நீக்கியதற்க்கான காரணம்  கூறாமல் ஜாதி சான்றிதழ் வழங்காமல் அலை கழித்து வருவதை கண்டித்து இன்று தட்டனேரி கிராமத்தில் உள்ள சுமார் தங்களது 500க்கும் மேற்பட்ட  பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பாமல் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.