மாவட்டம்

பச்சிளம் குழந்தைகள் வார்டில் எலிகள்... அரசு மருத்துவமனையின் அவல நிலை...

பச்சிளங்குழந்தைகள் வார்டில் எலிகள் துள்ளி குதித்து வருவதால் அங்குள்ள தாய்களும், குடும்பத்தினரும் பதட்டம் அடைந்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

நாமக்கல் | மோகனூர் சாலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுமார் 100க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ள இந்த மருத்துவமனையில் நாமக்கல் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுவர்.

நாள்தோறும் 10க்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பச்சிளங்குழந்தைகள் வார்டில் எலி தொல்லை அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரசவம் முடிந்து பச்சிளம் குழந்தைகள் வார்டில் குழந்தையுடன் அவர்களது தாய் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது பைகள், குழந்தைகளான மெத்தை விரிப்புகள், தலையணை மற்றும் உணவு பொருட்கள் போன்றவற்றை அங்குள்ள எலிகள் கடித்து நாசம் செய்வதாக குற்றச்சாட்டுகின்றனர்.

மேலும் எலிகளின் கழிவுகள் குழந்தைகளின் மெத்தை விரிப்புகளில் பட்டு துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

இதுகுறித்து பலமுறை மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தாலும் அவர்கள் பொதுமக்களிடம் கடிந்து கொள்வதாகவும் எனவே பச்சிளங்குழந்தைகள் வார்டில் உள்ள  எலிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.