கோவை | ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதிக்கு கேரளா வனப்பகுதியில் இருந்து சுள்ளி கொம்பன் என்கின்ற ஒற்றை காட்டு யானை கடந்த ஒரு மாதமாக ஆழியார், பட்டர்பிளை பார்க், நவமலை, சின்னார்பதி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நடமாடி வருகிறது.
மேலும் பகல் நேரங்களில் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உலா வந்து சாலையின் குறுக்கே நின்று கொண்டிருப்பதாலும் பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர்.
இதனை அடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வாகனத்தில் சுழற்சி முறையில் சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு நவமலை மின்வாரிய குடியிருப்பு அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த அருள்ராஜ் மற்றும் தியாகராஜன் மின்வாரிய ஊழியர்களின் இரண்டு கார்களை சேதப்படுத்தி உள்ளது.
அப்பகுதியில் வாழும் மக்கள் யானையை பிடித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நவமலைக்கு சென்ற அரசு பேருந்தை வழிமறித்து பேருந்து ஓட்டுனருக்கு அச்சத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மக்னா - காட்டு யானைக்கு மயக்க ஊசி...