Thirunelveli Halwa shop Owner kavitha singh and her daughter 
மாவட்டம்

“இருட்டுக்கடைக்கே” அல்வா கொடுக்க முயற்சித்த மருமகன்!? கண்ணீர் ததும்ப பேசிய ஓனரின் மகள்!

தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்த கவிதா சிங்..

Anbarasan

அல்வா என்றாலே ‘இருட்டுக்கடை அல்வா’ தான் நம் நினைவுக்கு வரும். 

இந்த அல்வாவை ஒருமுறையாவது நேரில் சென்று சாப்பிட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால்  இந்த அல்வா கடை ஓனரின் குடும்பத்திற்கே  தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

இந்த உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் உரிமையாளர் கவிதா சிங், தனது மகள்  ஸ்ரீ கனிஷ்காவை மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கவிதா சிங் அளித்த புகாரில், தனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2, 2025 அன்று தாழையத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, கனிஷ்கா தனது கணவருடன் கோயம்புத்தூரில் வசித்து வந்த நிலையில், பல்ராம் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை கனிஷ்கா கண்டித்ததால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த கனிஷ்கா கடந்த மார்ச் 15 -ஆம் தேதி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் இரவு, பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் கவிதா சிங்கின் வீட்டிற்கு வந்து, கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டுமென்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றும் மிரட்டியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது மகளின் எதிர்காலத்தைக் கருதி இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இருந்த கவிதா சிங், பின்னர் பல்ராம் சிங் தொடர்ந்து வாட்ஸ்அப்பில் அநாகரீகமான குறுஞ்செய்திகளை அனுப்பி மிரட்டியதால், தனது உயிருக்கும், தனது குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதை  உணர்ந்துள்ளார்.. எனவே, தனது கணவர் பல்ராம் சிங் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிஷ்கா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லையில் தலைமுறை தலைமுறையாக பிரபலமான இருட்டுக்கடை அல்வா உரிமையாளரின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த வரதட்சணை புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் குறித்து நெல்லை மாநகர காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்