மாவட்டம்

விளைநிலங்களில் பிரேதத்தை எடுத்துச் செல்லும் கிராம மக்கள் படும் அவதி...

மயானத்திற்கு உரிய பாதை வசதி இல்லாததால் கருவேல மரங்கள், புதர்களை அகற்றி, விளைநிலங்களில் பிரேதத்தை கிராம மக்கள் தூக்கிச் செல்லும் அவலம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

தஞ்சாவூர் | ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவரது உடல்களை மயானத்திற்கு எடுத்துச் செல்ல உரிய பாதையில் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்ற முதியவர் உடல்நல குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை தகனம் செய்வதற்காக மயானத்திற்கு எடுத்து செல்ல பாதை இல்லாததால், மயானத்திற்கு செல்லக்கூடிய பாதையில் உள்ள கருவேல மரம், புதர்களை கிராம மக்கள் சேர்ந்து அகற்றினர்.

பின்னர் உளுந்து தெளிக்கப்பட்ட விளைநிலங்கள் வழியாகவும் உடலை தூக்கிச் சென்று தகனம் செய்தனர். இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் மயானத்திற்கு செல்லக்கூடிய பாதை இல்லாததால், ஒவ்வொரு முறையும் இங்கு மண்டியுள்ள புதர்களையும், கருவேல மரங்களையும் அகற்றி, பிறகு விளைநிலங்கள் வழியாக தூக்கிச் செல்லக்கூடிய அவலநிலை உள்ளது.

விளைநிலங்களில் உடலை எடுத்துச் செல்லும்போது அங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் சேதமடைகின்றன. இதனால் நில உரிமையாளர்களுக்கும் - உடலை எடுத்துச் செல்பவர்களுக்கும் மனக்கசப்பு ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் இனியும் அலட்சியம் செய்யாமல் இப்பகுதியில் உரிய பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.