”பீஸ்ட்” படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடித்து வரும் திரைப்படம் “தளபதி 66”. இயக்குனர் வம்சி இயக்கி வரும் இந்த படத்தை தில் ராஜீ தயாரிக்கிறார். சமீபத்தில் முடிந்த படத்தின் பூஜையை அடுத்து இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் தளபதி விஜய் இதில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளாராம். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த பெப்சி தொழிலாளர்கள் தன் படத்தால் பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த வேண்டும் என தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் விஜய் கோரிக்கை விடுத்ததாகவும் இந்த கோரிக்கையை படக்குழுவினர் ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தற்போது ’தளபதி 66’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் இதனால் 100 முதல் 200 தொழிலாளர்கள் வரை வேலை பெற்று உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அறிந்த பெப்சி தொழிலாளர்கள், விஜய் எடுத்த இந்த முடிவை பாராட்டியதுடன் மகிழ்ச்சியில் அவருக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.