பொழுதுபோக்கு

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை! அடையாறு ஆற்றில் குதித்து உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்!

குடும்ப பிரச்சினைகளா, சினிமா துறையுடன் தொடர்புடைய காரணங்களா அல்லது நிதி நெருக்கடியா

Muthu Lakshmi

சென்னையில் பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 85 வயதான கே.ராஜன், சென்னை அடையாறு ஆற்றில் குதித்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

காரில் சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுநரிடம் வண்டியை நிறுத்துமாறு கூறிய அவர், பின்னர் காரிலிருந்து இறங்கி இந்த அதிரடி முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், அவரது உடலை மீட்டனர். இதையடுத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினைகளா, சினிமா துறையுடன் தொடர்புடைய காரணங்களா அல்லது நிதி நெருக்கடியா என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

1983ஆம் ஆண்டு வெளியான ‘பிரம்மச்சாரிகள்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கே.ராஜன். அதன் பின்னர் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தமிழ் திரையுலகில் தொடர்ந்து இயங்கி வந்தார். அஜித்தின் ‘துணிவு’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ள அவர், மொத்தம் 18 படங்களை தயாரித்ததாக கூறப்படுகிறது. மேலும், ‘எங்க மாரியம்மா’ மற்றும் ‘உணர்ச்சிகள்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார்.

சமீப காலமாக திரைத்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்தவர் கே.ராஜன். திரைப்படத் துறையில் நேர்மையான மற்றும் துணிச்சலான குரலாக அவர் பார்க்கப்பட்டார். கடந்த 2000ஆம் ஆண்டு சென்னை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்த அவர், தமிழ் சினிமா வர்த்தகத்திலும் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது திடீர் மரணம் திரையுலகினரையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.