பொழுதுபோக்கு

இனி திரையரங்குகளில் ஐபிஎல், கால்பந்து , அழகிப்போட்டிகள் ஒளிபரப்ப திட்டம் - திரையரங்க உரிமையாளர் சங்கம்.

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க  கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அப்பொழுது திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு ஐந்து வேண்டுகோளையும் அரசிற்கு சில கோரிக்கைகளையும் வைத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்:- 

”பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைவது குறித்து விவாதித்தோம்; 4 வாரத்தில் ஒடிடியில் வெளியாவதால் கூட்டம் குறைகிறது இது தொடர்பான விளம்பரங்கள் 4வாரம் கழித்து தான் வெளியிடவேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களிடம் பேசவுள்ளோம்; திரையரங்குகளில் திரைப்படம் மட்டுமே வெளியிட வேண்டும் என்பதை மாற்றி வேறு நிகழ்ச்சி நடத்தினால் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நல்ல படங்கள் வருவது குறைந்து விட்டது; பெரிய இயக்குனர்கள் புது புது நாயகர்களை வைத்து படம் எடுத்தால் படம் நன்றாக ஓடும். ஏன் என்றால் படம் ஓட நல்ல இயக்குனர், கதை தான் காரணம்”,  என கூறினார். 

ஐ.பி.எல் ஆட்டங்களை, திரையிடுதல், உலககோப்பை, கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்டவை, உலக அழகி போட்டி உள்ளிட்டவற்றையும் ஒளிப்பரப்ப திட்டமிட்டுள்ளோம் எனவும், பாதுகாப்பினை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்றும் கூறினார். 

ஒடிடியில் வெளியாகும் படங்களுக்கு 10% ராயல்டி எங்களுக்கு கொடுக்கவேண்டும்; எங்கள் திரையரங்களில் வெளியாகும் வசூலை வைத்து தான் ஓடிடியில் முடிவு செய்கிறார்கள் என்றார்.

மேலும், திரையரங்குகளில் திண்பண்டங்களை அதிக விலைக்கு விற்பது குறித்த கேள்விக்கு:-  அதன் மூலம் தான் 70% திரையரங்குகள் ஓடுகிறது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், மாமன்னன் திரைப்படம் வருவதற்கு முன் சில மாதங்களாக திரையரங்கிற்கு கூட்டம் வரவில்லை மாமன்னன் படத்திற்கு நல்ல கூட்டம் திரையரங்கிற்கு வந்தது. அதே போல் ’குட் நைட்’ உள்ளிட்ட சிறிய படங்களுக்கு கூட்டம் வந்தது. கதையம்சம் தான் முக்கியம் என கூறினார். 

ஆண்டுக்கு ஒரு படம் என்பதை கடந்து பெரிய நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய், கமல் உள்ளிட்டவர்கள் இரு படங்களில் நடிக்கவேண்டும் என கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தார்.