தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4 ஆண்டுகளாக நீடித்து வந்த இவர்களது திருமண உறவு,அண்மையில் முடிவுக்கு வந்தது. இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆனதை தொடர்ந்து சமந்தா-வின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து பல்வேறு தகவல்கள் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் அனைத்திலும் விவாதிக்கப்பட்டன.
இதனால் கோபமடைந்த நடிகை சமந்தா விவாகரத்து விவகாரத்தில் தன்னைப் பற்றி அவதூறாக தகவல்களை பரப்பி வரும் யூடியூப் சேனல்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர், தனது திருமண வாழ்க்கை குறித்தும், தனக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் தவறாக பேசியதால், அவர்மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் சமந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.