பொழுதுபோக்கு

விருது பெற்ற நடிகர்..இரண்டாம் தாயகம் எனக்கூறி உருக்கம்...!

துபாயில் தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற அமீரகத்தின் 50-வது பொன்விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய  நடிகர் விஜய்சேதுபதி துபாயை எனது இரண்டாம் தாயகமாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

துபாயில் உள்ள  தனியார் நட்சத்திர ஓட்டலில் சர்வதேச புரோமோட்டர்ஸ் சங்கத்தின் சார்பில் அமீரகத்தின் 50-வது பொன்விழா மற்றும் செல்வாக்கு மிகுந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அஜ்மான் ஆட்சியாளர் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்  இந்திய தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமீரகத்தில் வசிக்கும் ஆசிய நாடுகளை சேர்ந்த செல்வாக்கு மிகுந்த தொழில் அதிபர்கள், நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் சேதுபதி விருதுகளை வழங்கினார். அதன் பிறகு அவர் நடித்து பிரபலமான ‘டசக்கு டசக்கு’ என்ற பாடலுக்கு நடனக்குழுவினர் நடனம் ஆடினர். 

இதனை தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதிக்கு சினிமாத்துறையில் செல்வாக்கு மிகுந்த நட்சத்திர விருதினை அஜ்மான் ஆட்சியாளர் அலுவலகத்தின் தலைவர் டாக்டர் மாஜித் பின் சயீத் அல் நுயைமி வழங்கினார். 

இதையடுத்து மேடையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, “நான் சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். மிகப்பெரிய லட்சியங்களுடன் நான் கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய்க்கு வந்தேன் என்றார். இங்குள்ள பர்துபாய், அல் பஹிதி சாலைகளில் எனது கனவுகளுடன் நடந்து சென்றுள்ளேன்.  இங்கு வந்தபிறகு இது ஒரு புதிய நாடு, வெளிநாடு என்ற உணர்வு இல்லாமல் எனது 2-வது தாயகமாக துபாயை உணர தொடங்கினேன்” என்று உருக்கமாக கூறினார்.

மேலும் 3 ஆண்டுகள் துபாயில் பணியாற்றிய பிறகு சென்னைக்கு சென்றேன். பின்னர் திருமணம் செய்ததை தொடர்ந்து,  சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு, இந்த நிலைக்கு வந்து சென்னையில் குடியேறினேன்.

ஆனால், அதற்கு பிறகு பலமுறை விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்காக துபாய்க்கு வருகை புரியும் போதெல்லாம்  நான் வசித்த பகுதியை மறக்காமல் சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். துபாய் நகரம் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வருகிறது.”இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.