Rio Raj feminism comments 
பொழுதுபோக்கு

"பெண்ணியம்னா ஒரு ஃபீலிங்.. அதுக்கு கோட்பாடு இல்ல" வைரல் வீடியோவால் சிக்கிய ரியோ! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

பெண்ணியம் என்பது ஒரு உணர்வு. அதற்கு எல்லைகளோ, கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லை என்று பேசினார்.

Vinvizhi Leninton

நடிகரும், விஜே-வுமான ரியோ ராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பெண்ணியம் பற்றி பேசிய விஷயம் சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியதோடு, நெட்டிசன்கள் ரியோவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சியில் வீடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கியவர்தான் ரியோ ராஜ். இவர் 2019-ம் ஆண்டு 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் ரியோ ராஜ். சமீபத்தில் வெளியான 'ஆண் பாவம் பொல்லாதது' என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும், பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. மேலும், இந்த திரைப்படம் 'பெண்ணியம்' பற்றிய ஒரு தவறான கண்ணோட்டதை கூற முயற்சிப்பதாகவும் பலரும் கூறிவந்தனர். இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதே பணியை ரியோ தொடர்ந்து வருகிறார். தற்போது 'ராம் இன் லீலா' என்ற அவர் நடித்த திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக சுதிர் சீனிவாசனின் யூடியூப் சேனலில் ரியோ நடித்த 'ஆண் பாவம் பொல்லாதது' படம் குறித்துப் பேசியபோது, ​​ரியோ 'பெண்ணியம்' பற்றிப் பேசினார். அந்த பேச்சு சமூகவலைத்தளத்தில் வைரலானது.

அதில் அவர், "பெண்ணியம் என்பது ஒரு உணர்வு. அதற்கு எல்லைகளோ, கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லை" என்று பேசினார். மேலும், "விவாகரத்து வேண்டி ஒரு பெண் காவல் நிலையத்திற்கு சென்றால் அங்கு எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படாமல் ஒரு ஆண்தான் குற்றவாளியாக்கப்படுகிறான்" என்றும் அவர் சர்சைக்குரிய வகையில் பேசினார். மேலும், "சிலபேர் பெண்ணியம் என்றால் என்ன என்பது குறித்து தெரியாமலேயே பேசுகிறார்கள். அப்படி பேசி மற்றவர்களின் கவனங்களை தங்கள் பக்கம் திருப்பி கொள்கிறார்கள்" என்று பேசியிருந்தார். "வெளியில் சமூக வலைத்தளம் இவைகளை தள்ளிவைத்து விட்டு அந்த குடும்பத்தை யோசித்து பாருங்கள் ஒரு கல்யாணம் ஒரு குழந்தை என்று அது ஒரு குடும்பமாக இருக்கப்போகிறது. அந்த குடும்பத்தினும் இந்த 'பொலிடிக்கல் ஸ்டேட்மென்ட்' வரும்போது அந்த குடும்பங்கள் உடைக்கிறதா? என்று கேட்டால் ஆம் குடும்பம் உடைகிறது", என்று அவர் இதற்கு முந்தைய நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.

மேலும், "என் அம்மா ஒரு வலிமையான பெண்மணி. அவர் பெண்ணியம் பற்றிப் பேசவில்லை; அதை வாழ்ந்து காட்டினார். என் அப்பாவின் ஆதரவு இல்லாமலேயே, அவர் இரண்டு குழந்தைகளை வளர்த்தார்” என்றார். "அவர் ஒரு ஒற்றைத் தாய் அல்ல என்றும், ஆனாலும் இரண்டு குழந்தைகளையும் தனியாகவே வளர்க்க வேண்டியிருந்தது" என்றும் ரியோ ராஜ் நேர்காணலில் தெளிவுபடுத்தினார். மேலும், "தான் எடுத்துக்கொண்ட தீர்மானத்தில் ஒரு பெண் நிலையாக நிற்கிறார்கள் என்றால் அதுதான் என்னை பொறுத்தவரை பெண்ணியம்" என்றும் அவர் பேசினார். இந்த சர்ச்சை பேச்சு இணையத்தில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல பயனர்களும் இந்த பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

"பெண்ணியம் என்றால் என்ன என்றே தெரியாமல் வகுப்பெடுக்கிறார்" என்ற வாதமே இணையத்தில் மிகவும் பேசப்பட்டு வருகிறது. மேலும், பெண்ணியம் ஏன் வந்தது?, தாய்மை என்பது எப்படி பெண்ணியமாக முடியும்?, தாய்மையை சுற்றித்தான் பெண்ணியம் இருக்கிறதா?, ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மூலம் ஒரு பெண் தனக்கு கீழே இருப்பதை விரும்பும் அல்லது அப்படி சுதந்திரமாக இருக்க விரும்பும் பெண் முட்டாளாகத்தான் இருப்பாளா? உட்பட பல்வேறு கேள்விகளை நெட்டிசன்கள், தங்களது கருத்துக்களை இன்ஸ்டாகிராம் மூலம் வீடியோவாக பகிர்ந்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்