பொழுதுபோக்கு

தமிழ்நாட்டில் வெளியாகுமா அவதார் இரண்டாம் பாகம் ?என்ன சிக்கல் ?

Malaimurasu Seithigal TV

கடந்த 2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் "அவதார்". இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் 16ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்திற்கு இந்தியாவிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


வெளியாக என்ன சிக்கல் ?

இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் ஏற்கனவே மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பல மடங்கு கட்டணத்தில் டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. தற்போது விநியோகஸ்தர்கள் அதிக அளவு பங்குத் தொகை கேட்பதாக கூறப்படுகிறது. வழக்கமாக 55 சதவீதத்தில் இருந்து 60 சதவீதம் பங்குத்தொகை வழங்கப்படும். ஆனால் இப்படத்திற்கு 70சதவீதம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் இப்படத்தை தமிழகத்தில் வெளியிட விநியோகஸ்தர்கள் நீ நான் என்று போட்டிபோட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதனால் விநியோகஸ்தர் உறுதியான பிறகே பங்குத்தொகை குறித்து பேச்சு நடைபெறும் என்கின்றனர். 

தமிழ்நாட்டில் வெளியாகுமா ?

இன்னும் வெளியீட்டிற்கு இரண்டு வாரங்கள் இருப்பதால் பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு எடுக்கப்பட்டு அவதார் 2 திரைப்படம் திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே கேரளாவில் இதே நிலை நீடித்தால் அவதார் படத்தை திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனால் தமிழ்நாட்டிலும் மக்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற ஐயம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.