வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் துபாய் நகரம், வரும் ஏப்ரல் 2026 முதல் தனது வங்கிச் சேவைகள், கல்வி, பயணம் மற்றும் குடியிருப்பு விதிகளில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டுவர உள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் அமீரகத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக வங்கிப் பரிமாற்றங்களில் இதுவரை நாம் பயன்படுத்தி வந்த ஒருமுறை கடவுச்சொல் எனப்படும் ஓடிபி (OTP) முறையில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளது. இனி உயர் மதிப்புள்ள பணப் பரிமாற்றங்களுக்கு உங்கள் செல்போன் எண்ணிற்கு வரும் குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஓடிபி-யை நம்பியிருக்க முடியாது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி எடுத்துள்ள இந்த அதிரடி முடிவின்படி, வாடிக்கையாளர்கள் இனி தங்களது வங்கியின் மொபைல் செயலி (Mobile App) மூலமாகவே பணப் பரிமாற்றங்களை உறுதிப்படுத்த வேண்டும். கடந்த 2025 ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இந்த மாற்றமானது, வரும் ஏப்ரலில் முழுமையாக நடைமுறைக்கு வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் கியூஆர் கோட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு இது கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்று சொல்லப்படுகிறது. இதனால் துபாயில் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது வங்கியின் செயலியைப் பதிவிறக்கம் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்வது அவசியம்.
கல்வித் துறையைப் பொறுத்தவரை, கடந்த மார்ச் 23 முதல் துபாயில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் ஆன்லைன் வழியாகவே வகுப்புகளை நடத்தி வந்தன. தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இந்த ஆன்லைன் வகுப்புகள் ஏப்ரல் 3-ம் தேதி வரை தொடரும் என்றும், அதன் பிறகு மாணவர்கள் நேரடியாகப் பள்ளிகளுக்குச் சென்று பயிலும் 'இன்-பர்சன்' வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாரந்தோறும் நிலைமையைப் பொறுத்து கல்வி அதிகாரிகள் உரிய முடிவுகளை எடுப்பார்கள் என்பதால், பெற்றோர்கள் பள்ளிகளின் அறிவிப்புகளைக் கவனித்து வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விமானப் போக்குவரத்துத் துறையிலும் ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. பிராந்திய ரீதியாக நிலவி வந்த சில இடையூறுகள் காரணமாகத் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குத் தங்களது சேவையை நிறுத்தி வைத்திருந்த சில சர்வதேச விமான நிறுவனங்கள், மீண்டும் ஏப்ரல் மாதம் முதல் தங்களது சேவையைத் தொடங்க உள்ளன. ஏர் பிரான்ஸ் நிறுவனம் ஏப்ரல் 2-ம் தேதி முதல் தனது விமானச் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனமும் மார்ச் இறுதிக்குப் பிறகு தனது சேவையைத் தொடர உள்ளது. பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் விமான நிறுவனங்களிடம் உறுதி செய்துகொள்வது நல்லது.
குடியிருப்பு விதிகளில் (Residency Rules) ஒரு முக்கியமான மாற்றம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. காலாவதியான விசா அல்லது குடியிருப்பு அனுமதி வைத்திருப்பவர்கள் புதிய நுழைவு அனுமதி இன்றி அமீரகத்திற்குத் திரும்ப வழங்கப்பட்டிருந்த தற்காலிகச் சலுகை மார்ச் 31-டன் முடிகிறது. ஏப்ரல் 1 முதல் பழையபடி முறையான மற்றும் செல்லத்தக்க ஆவணங்கள் இருந்தால் மட்டுமே நாட்டிற்குள் நுழைய முடியும் என்ற விதி அமலுக்கு வருகிறது. எனவே விசா தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள் மார்ச் மாதத்திற்குள்ளேயே அதைச் சரிசெய்து கொள்வது உத்தமம்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் துபாயின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தவும், இயல்பு வாழ்க்கையைச் சீராகக் கொண்டு வரவும் மேற்கொள்ளப்படுகின்றன. துபாயில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அங்கு வேலை நிமித்தமாகச் செல்பவர்கள் இந்த புதிய விதிமுறைகளுக்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும். வங்கிச் செயலி பயன்பாடு முதல் விசா காலாவதி தேதி வரை அனைத்திலும் விழிப்புணர்வுடன் இருந்தால் தேவையற்ற சிரமங்களைத் தவிர்க்கலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.