மற்றவை

பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசு பொருட்கள், நினைவு பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலம் - பொதுமக்களுக்கு பிரதமர் அழைப்பு

தனக்கு கிடைத்த பரிசு பொருட்கள், நினைவு பரிசுகள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கங்கையை மறு சீரமைக்கும் திட்டத்துக்கு பயன்படுத்தப்போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  

Malaimurasu Seithigal TV

பிரதமர் மோடிக்கு பல ஆண்டுகளாக கிடைத்த பரிசு பொருட்கள், நினைவு பரிசுகள் ஆகியவை ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டு வருகின்றன. சமீபத்திய ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர்கள், தாங்கள் பயன்படுத்திய விளையாட்டு உபகரணங்களை பிரதமருக்கு பரிசாக அளித்திருந்தனர்.

அந்த பொருட்கள் அதிக விலைக்கு ஏலம் கேட்கப்பட்டன. இந்தநிலையில், இந்த ஏலத்தில் பொதுமக்கள் பங்கேற்குமாறு மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த பல ஆண்டுகளாக தனக்கு கிடைத்த பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன என்றும், நமது ஒலிம்பிக் கதாநாயகர்கள் அளித்த பொருட்களும் இதில் அடங்கும் என்றும் பதிவிட்டுள்ளார்.  

மேலும், பொதுமக்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி,  இந்த வருவாய் கங்கையை மறுசீரமைக்கும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.