தொழில்நுட்பம்

ஃபோன் பே தொடர்ந்த வழக்கு...மொபைல் பேக்கு நீட்டித்த இடைக்கால தடை!

Tamil Selvi Selvakumar

மொபைல் பே செயலிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்த சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீடித்து உத்தரவிட்டிருக்கிறது.

வழக்கு தொடர்ந்த ஃபோன் பே:

டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலியான ஃபோன் பே நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போலவே இவர்களின்  சின்னமும் உள்ளதால் மொபைல் பே செயலிக்கு தடை விதிக்க கோரியிருந்தது.

இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்:

இந்த வழக்கானது, நீதிபதி  எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இரண்டு செயலிகளின் வணிக சின்னங்களும், லோகோக்களும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும், சாதாரண பொதுமக்கள் பார்வையில் அவை ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக கூறி, மொபைல் பே நிறுவனம் பண பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

தடையை நீட்டித்து உத்தரவு:

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.சுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை நவம்பர் 16ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, மொபைல் பே நிறுவனத்திற்கு இதுவரை பண பரிவர்த்தனை சேவைகளை வழங்க விதிக்கபட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டார்.