தொழில்நுட்பம்

அடுத்த ஓரிரு நாளில் 'புதிய மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம்'...

சென்னை நந்தனத்தில் கட்டப்பட்டுள்ள 'புதிய மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம்' அடுத்த ஓரிரு நாளில் திறக்கப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Malaimurasu Seithigal TV

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம், கோயம்பேட்டில் தற்போது இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் இடவசதி போதிய அளவில் இல்லை என்பதாலும், அடுத்தகட்டமாக, மூன்று வழித்தடங்களில் நடக்கும் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளுக்கும், தற்போதுள்ள மெட்ரோ ரயில் தடத்திற்கும் மையப்பகுதியில் மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே 3.90 லட்சம் சதுர அடியில், 365 கோடி ரூபாய் செலவில், புதிய தலைமை அலுவலகம் கட்டும் பணிகள், சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

"சி.எம்.ஆர்.எல் பவன்" என்ற பெயரில் அமைந்துள்ள இந்த கட்டடத்தில், 12 மாடிகளுடன் ஒரு கட்டடமும், தலா ஆறு மாடிகளுடன் இரண்டு கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் அதிகாரிகள், பணியாளர்கள் குடியிருப்புகள், தனியார் நிறுவனங்களுக்கான வாடகை தளம் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன.

ஒட்டுமொத்த பணிகளும் முடிக்கப்பட்டுள்ளதால், புதிய மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் அடுத்த ஓரிரு நாளில் திறக்கப்பட உள்ளதாக, மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடில் தற்போதுள்ள தலைமை அலுவலகத்தில் மெட்ரோ ரயில் இயக்கம், பாதுகாப்பு பணி மேற்கொள்ளும் 'கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைகள்' விரிவுப்படுத்தப்பட்டு, செயல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.