இந்தியா

125 அடி உயர அம்பேத்கர் சிலை... திறந்து வைத்த பேரன்!!

Malaimurasu Seithigal TV

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 125 அடி உயர அம்பேத்கர் சிலையை அவரது பேரன் பிரகாஷ் அம்பேத்கர் திறந்து வைத்துள்ளார்..

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரின் 133வது பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  இதைத்தொடர்ந்து சுமார் 149 கோடி ரூபாய் மதிப்பில் ஐதராபாத்தில் நாடாளுமன்ற கட்டிட வடிவில் 125 அடி உயரத்தில் அம்பேத்கரின் சிலை கட்டப்பட்டது. 

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான முக்கிய நிகழ்வுகள் அடங்கிய அருங்காட்சியகம் மற்றும் புகைப்படத் தொகுப்பு நிறுவப்பட்டுள்ளதுடன், கட்டிடத்தின் உள்ளே ஆடியோ காட்சி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.  தொடர்ந்து இந்நிகழ்வில் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மட்டுமே தலைமை சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டிருந்தார்.  நிகழ்வில் அம்பேத்கர் சிலையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரகாஷ் அம்பேத்கர், சிலையை திறந்து வைத்தார். 

தொடர்ந்து ஜெய்பீம் முழக்கங்களுக்கு மத்தியில், ஹெலிகாப்டர் மூலம் அம்பேத்கர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.