இந்தியா

அதிவேகமாக காரை ஓட்டியதால் நேர்ந்த விபரீதம்...உடல் நசுங்கி ஒருவர் உயிரிழப்பு...!

பெங்களூரில் உள்ள 80 அடி சாலையில், பென்ஸ் கார் ஓட்டுநரின் அதிவேகத்தால் நிகழ்ந்த பயங்கர விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Malaimurasu Seithigal TV

பெங்களூரில் உள்ள 80 அடி சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் ஒருவர் உடல் நசுங்கி இறந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்திராநகரின் 80 அடி சாலை கடந்தாண்டு தான், 'ஒயிட் டாப்பிங் சாலை' அமைத்து மேம்படுத்தப்பட்டது. சாலையின் நடுவிலும், இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகின்றன.

இந்த சாலையில்,   அதிவேகமாக வந்த பென்ஸ் கார் ஒன்று , இடது புறத்திலிருந்து வந்த கார் மீது மோதியது. மோதிய வேகத்தில், மற்றொரு கார் மீது மோதி, அந்த கார்கள் முன்னால் இருந்த மினி டெம்போ, ஆட்டோ மீது மோதி தொடர் விபத்தை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில்  அனைத்து வாகனங்களும் நொறுங்கின. இதில், அசாமை சேர்ந்த ஹரிஷ் மோஹந்தி  என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதனையடுத்து,விபத்தில் படுகாயமடைந்த 10 க்கும் மேற்பட்டோர், அருகிலுள்ள  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இருந்தபோதிலும், ஒருவர் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால், உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்த விபத்து காரணமாக, அந்த சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு,போக்குவரத்து போலீசார் வாகனங்களை மீட்டு சென்றனர். மேலும்,பென்ஸ் கார் ஓட்டுனரின் அதி வேகமே இந்த கோர  விபத்துக்கு முக்கிய காரணம் என்று போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்திவருகின்றனர்.