இந்தியா

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலியாக குளிர்விப்பான்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்த அரசு...

மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதன் எதிரொலியாக, அங்கு குளிர்விப்பான்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் மட்டும், கடந்த ஜனவரி மாதம் முதல் 410 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெங்கு பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் கொசுக்களால் பரவும் நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்விப்பான்களில் மீதமிருக்கும் நீரில், ஏடிஸ் கொசுக்களின் லார்வாக்கள் வளர்வதாக, ஜபல்பூர் மாவட்ட மலேரியா தடுப்பு அதிகாரியான ராகேஷ் பஹாரியா தெரிவித்துள்ளார். எனவே, அவற்றை வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், டெங்கு பாதிப்புகளை குறைப்பதற்காக, குளிர்விப்பான் பயன்பாட்டிற்கு ஜபல்பூர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.