இந்தியா

சீன ஊடுருவல்: மக்களவை, மாநிலங்களவையில் விளக்கமளித்த ராஜ்நாத்சிங்!

Tamil Selvi Selvakumar

அருணாச்சலப்பிரதேசத்தில் சீன ஊடுருவல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், மோதலில் எந்த இந்திய வீரரும் படுகாயம் அடையவில்லை எனவும் மக்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார்.

விளக்கமளித்த ராஜ்நாத்சிங்:

சீனாவின் எல்லையான தவாங் செக்டார் யங்ட்சி என்ற எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் கடந்த 9ம் தேதி இந்தியா, சீன நாட்டு வீரர்கள் மோதிக்கொண்டதாகவும், ஏராளமானோர் இதில் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து மோதல் தொடர்பாக மக்களவையில் விளக்கமளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீன ஊடுருவல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், எந்த இந்திய வீரரும் இறக்கவில்லை எனவும் தெரிவித்தார். இரு தரப்பு ராணுவத்திலும் சிலர் மட்டுமே காயமடைந்ததாகவும் இந்திய வீரர்கள் யாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். மோதலைத் தொடர்ந்து 12ம் தேதி இந்திய உள்ளூர் தளபதி சீனப்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதையடுத்து கொடி அணிவகுப்பு நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

மாநிலங்களவையிலும் விளக்கம்:

தொடர்ந்து மாநிலங்களவையில் பேசிய ராஜ்நாத்சிங், சீனப்படைகள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாக குற்றம் சாட்டினார். இந்திய ராணுவத்தினர் சரியான நேரத்தில் தைரியத்துடன் தலையிட்டதால், ஊடுருவல் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் இதில் சில வீரர்கள் மட்டுமே காயமடைந்ததாகவும் குறிப்பிட்டார்.