இந்தியா

புதிய குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தேர்வு.. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நாளை பதவியேற்பு!!

புதிய குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்மு நாளை  பதவி ஏற்கவுள்ளார்.

Suaif Arsath

திரௌபதி முர்மு வெற்றி:

நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் திரௌபதி முர்மு வீழ்த்தினார்.இதையடுத்து அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 குடியரசு தலைவராக நாளை பதவியேற்பு:

இந்த நிலையில், நாட்டின் 15  வது  குடியரசு தலைவராக திரௌபதி முர்மு நாளை பதவி ஏற்க உள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசு தலைவர் பதவி ஏற்புக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர்  ராமநாத் கோவிந்த் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.