over heat 
இந்தியா

10 மாநிலங்களைச் சுட்டெரிக்கும் வெயில்! மே 26 வரை அலர்ட்; உங்க ஏரியாவில் என்ன நிலைமை?

சில நாட்களுக்கு அதிக வெப்பம் மற்றும் புழுக்கமான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

மாலை முரசு செய்தி குழு

வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் பல மாநிலங்களை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வரும் மே 26-ஆம் தேதி வரை பல மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதன்கிழமை இரவு வெப்பமான இரவாகப் பதிவாகியுள்ளது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸைத் தொடக்கூடும் என்பதால், அங்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி மட்டுமல்லாமல் பஞ்சாப், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களிலும் வரும் மே 21-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை கடும் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் மேற்கு மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், கடலோர ஆந்திரா, யானம், தெலுங்கானா, ஒடிசா, பீகார், ராஜஸ்தான் மற்றும் விதர்பா, மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளிலும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். ஒடிசா, உத்தரப் பிரதேசம் மற்றும் விதர்பா பகுதிகளில் இரவு நேரத்திலும் வெப்பம் குறையாமல் தகிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு அதிக வெப்பம் மற்றும் புழுக்கமான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் மக்கள் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. அதேசமயம், இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அருணாச்சல பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்குத் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், மேற்கு வங்கம், சிக்கிம், பீகார், ஜார்கண்ட், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டிலும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், கோடையின் வெப்பத்திலிருந்து மக்களுக்குச் சிறிது நிம்மதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெயில் மற்றும் மழை என மாறி வரும் இந்த வானிலை மாற்றத்தால் பொதுமக்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.