நமக்கு கற்பிக்கப்பட்ட வரலாற்று சம்பவங்கள் நம்மிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
வீர பாலகர்கள் தினம் அனுசரிப்பு:
முகலாயர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களின் தியாகத்தைப் போற்றும் வீரபாலகர்கள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லி மேஜர் தியான்சந்த் மைதானத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் முதலாவதாக 300 சிறுவர்கள் இணைந்து கீர்த்தனைகள் பாடியதை பிரதமர் கேட்டு ரசித்தார்.
சிறுவர்களின் பேரணியை துவக்கி வைத்த மோடி:
தொடர்ந்து, மூவாயிரம் சிறுவர்கள் பங்கேற்ற பேரணியைத் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களின் படங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனம் முன் செல்ல அதனைப் பின் தொடர்ந்து சிறுவர்களின் பேரணி நடைபெற்றது.
வரலாறுகள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கின:
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், குரு கோவிந்த் சிங்கின் மகன்களின் தியாகம் இன்றைய தலைமுறையினருக்கு ஊக்கமளிப்பதாக கூறினார். வீர பாலகர்களின் தியாகம் போன்ற வரலாறுகள் மூலம் நமது நாட்டை நம்பிக்கை நிறைந்த நாடாக உருவாக்க வேண்டுமென்று கூறினார். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் முகலாய சாம்ராஜ்ஜியத்தின் கண்மூடித்தனமான மதத் தீவிரவாதத்தை எதிர்த்து நமது குருமார்கள் போரிட்டதாக கூறிய அவர், நமக்கு கற்பிக்கப்பட்ட வரலாற்று சம்பவங்கள் நம்மிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.