இந்தியா

அமெரிக்காவிடமிருந்து ‘ஜாவலின்’ ஏவுகணை வாங்கும் இந்தியா... Tank-களை தாக்கும் அதிநவீன ஆயுதம்!

அதனை தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஏவுகணை தானாகவே இலக்கை நோக்கி சென்று தாக்கும்

Muthu Lakshmi

இந்தியா தனது ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், அமெரிக்காவிடமிருந்து ‘ஜாவலின்’ டாங்கெதிர்ப்பு ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. அமெரிக்காவின் வெளிநாட்டு ராணுவ விற்பனைத் திட்டத்தின் கீழ் இந்த ஆயுதங்களை வாங்குவதற்காக, இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை ‘Letter of Offer and Acceptance’ எனப்படும் சலுகை மற்றும் ஏற்பு கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைந்து ஆயுதங்களை தயாரிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு கூட்டாண்மை தொடர்ந்து வலுப்பட்டு வருவதைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத் துறைகள் இணைந்து செயல்படுவதற்கும் இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் கூறியுள்ளார்.

‘ஜாவலின்’ என்பது டாங்குகள் மற்றும் கவச வாகனங்களை தாக்குவதற்காக பயன்படுத்தப்படும் ஏவுகணை அமைப்பு. அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் மற்றும் RTX நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையின் முக்கிய சிறப்பு ‘Fire and Forget’ தொழில்நுட்பமாகும். அதாவது, வீரர்கள் ஏவுகணையை இலக்கை நோக்கி செலுத்திய பின், அதனை தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஏவுகணை தானாகவே இலக்கை நோக்கி சென்று தாக்கும். இதனால் ஏவுகணையை செலுத்திய வீரர்கள் உடனடியாக அந்த இடத்தை விட்டு நகர முடியும்.

மேலும், இதை வீரர்கள் எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என்பதும் முக்கிய சிறப்பம்சமாகும். டாங்குகள், கவச வாகனங்கள் மட்டுமின்றி, சில பாதுகாப்பு நிலைகளையும் தாக்கும் வகையில் ஜாவலின் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க ராணுவம் மற்றும் கடற்படையினர் இந்த ஆயுதத்தை பயன்படுத்தி வருகின்றனர். உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் ஜாவலின் ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜாவலின் ஏவுகணையை வாங்குவதற்கான திட்டத்தை இந்தியா கடந்த சில ஆண்டுகளாக பரிசீலித்து வந்தது. கடந்த நவம்பர் மாதம், சுமார் 45.7 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான இந்த ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருந்தது. இந்த ஒப்பந்தத்தில் 100 ஜாவலின் ஏவுகணைகள், ஒரு பயிற்சி ஏவுகணை மற்றும் 25 இலகுரக கட்டளை ஏவு அலகுகள் உள்ளிட்ட உபகரணங்கள் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. அமெரிக்காவிடமிருந்து இந்தியா ஏற்கெனவே P-8I கடல்சார் ரோந்து விமானங்கள், Apache மற்றும் Chinook ஹெலிகாப்டர்கள், MH-60R Seahawk ஹெலிகாப்டர்கள், M777 ஹோவிட்சர்கள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ உபகரணங்களை வாங்கியுள்ளது. மேலும், MQ-9B ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பாதுகாப்பு கொள்முதல்களிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜாவலின் ஏவுகணை ஒப்பந்தம் இந்திய ராணுவத்தின் டாங்கெதிர்ப்பு திறனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு மேலும் வலுப்படும் எனவும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.