கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரின் பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர் ஹர்ஷா. இவர் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக போராட்டத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று ஷிவமோகா நகரில் சென்றுக் கொண்டிருந்தவரை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதனையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் ஷிவமோகா நகரில் பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ஞானேந்திரா மருத்துவமனைக்கு நேரில் செனு ஹர்ஷாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
குற்றவாளிகளை பிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் இஸ்லாமிய குண்டர்கள் சிலர் சேர்ந்து படுகொலையை நிகழ்த்தியுள்ளதாக அமைச்சர் ஈஸ்வரப்பா சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.