இந்தியா

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் அமல்

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், அதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு, யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனியுடன் 4 ஆண்டு கால ஒப்பந்தம் செய்துள்ளதோடு, இன்று முதல் 2025 ஜூன் 30 வரை 4 ஆண்டு காலத்துக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைகளுக்கு, காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்படும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான வழிக்காட்டுதல்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது, அந்த வகையில், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடம் இருந்தும் மாதந்தோறும் ரூ.300 பிடித்தம் செய்யப்படும் எனவும், ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த காப்பீட்டுத் திட்டம் பொருந்தாது எனவும் தமிழக அரசு சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாத மருத்துவமனைகளில் ஏதேனும் அவசரத்தின் அடிப்படையில் சிகிச்சை எடுத்துக்கொண்டாலும், அதற்கான தொகை பின்னர் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.