பிரதமர் மோடி தலைமையிலான வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை இணை அமைச்சராக இருந்தவர் பபுல் சுப்ரியோ. இவர் மேற்கு வங்க பாஜக தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பின்னர் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார்.
அதைத்தொடர்ந்து எம்.பி பதவியையும் ராஜினாமா செய்ய திட்டமிட்ட அவர், அதிகாரப்பூர்வமாக அப்பதவியிலிருந்து விலக மக்களவை சபாநாயகரை சந்திக்க உள்ளதாக கூறியிருந்தார். ஆனால் அதுதொடர்பான கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என சபாநாயகர் அலுவலகம் கூறியிருந்தது. இந்த நிலையில் அவர் நாளை சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்திக்கவுள்ளதாக டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.