இந்தியா

இந்தியாவின் 6வது குரங்கம்மை வழக்கு பதிவு!

டெல்லியில் வாழும் நைஜீரிய நபருக்கு குரங்கம்மை உறுதி. நோயாளியின் மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்ஐவி) அனுப்பப்பட்டன.

Malaimurasu Seithigal TV

அடையாளம் வெளியிடப்படாத நைஜீரிய நபர் ஒருவருக்கு, குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 வயதான அவர், இந்திய தலைநகர் டெல்லியில் வசிக்கிறார். சமீப காலங்களில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளாத அவருக்கு, குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில், இவர் இரண்டாவது நபராக இருக்கும் நிலையில், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆறாவது குரங்கம்மை பாதிக்கப்பட்டவராக இவர் அடையாளம் காணப்படுகிறார்.

அவரது மாதிரிகள் பூனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, திங்கட்கிழமை காலை உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர், டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் (LNJP) அரசு மருத்துவமனையில், குரங்கம்மைக்கான பிரத்யேக பிருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

ஏற்கனவே, ஆப்ரிக்காவைச் சேர்ந்த இரண்டு பேர் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.