மும்பை நகரின் பல இடங்களில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கன மழையால் நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மும்பை - புனே சாலையில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நவி மும்பையில்தான் அதிக அளவிலான மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தொடர் கன மழையால் சான்பாடா, வாஷி, டர்பே, போன்ற தாழ்வான பகுதிகளில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திங்கள் அதிகாலையில் இருந்து நவி மும்பையில் பல சாலைகள் நீரில் மூழ்கியதால், இரு சக்கர வாகனங்களும் மற்ற வாகனங்களும் வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் செல்ல முடியாமல் தவித்தன.. மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் உடைந்தும் விழுந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் வருகிற புதன் கிழமை அதாவது அடுத்த 48 மணி நேரம் வானிலை மோசமடைய வாய்ப்புள்ளதால், ரெட் அலர்ட் அளித்து உள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
மும்பை விமான நிலையம் முழுதும் விமானம் தரையிறங்கும் ஓடுதளத்திலும் நீர் சூழ்ந்துள்ளதால், விமான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேரிடர் தடுப்பு மேலாண்மை குழுவுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “தானே, மும்பை, சிந்து தர்க், ரத்தினகிரி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் தாழ்வான பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பேரிடர் மீட்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அடுத்த 48 மணி நேரம் நிலைமை மோசமாக வாய்ப்புண்டு, எனவே மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.