புதுச்சேரி நகரப்பகுதியில் உள்ள குபேர் மீன் அங்காடியில் உள்ளூர் மீனவர்கள், மீன்களை விற்பனை செய்து வருகின்றனர். சமீக காலமாக தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரும் மீன்கள் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் வெளி மாநிலத்தில் இருந்து வரும் மீன்கள் விற்பனை செய்யப்படுவதால் புதுச்சேரியில் உள்ள மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறி 100 க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் தேங்காய்திட்டு துறைமுக நுழைவாயிலை பூட்டி தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வெளி மாநிலத்தில் இருந்து வரும் மீன்கள் விற்பனை செய்வதை முழுமையாக தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வெளி மாநில மீனவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆதரவாக செயல்படுவதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டி பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.