இந்தியா

தேசியக்கொடி மீது பா.ஜ.க. கொடி... காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம்...

உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யான் சிங் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது அவரின் உடல் மேல் விரிக்கப்பட்ட  தேசிய கொடியின் மீது பாஜகவின் கொடி போர்த்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

Malaimurasu Seithigal TV

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங் நேற்று முன்தினம் காலமானார். கல்யாண் சிங் உடல் அஞ்சலிக்காக லக்னோவில் அவரது வீட்டில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் திறமையான ஒரு தலைவரை இழந்துவிட்டதாகவும், அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில் கல்யான் சிங் உடலுக்கு ஜே.பி நட்டா இறுதி அஞ்சலி செலுத்தும் போது அவரின் உடல் மேல் இருந்த தேசிய கோடி  மீது பாஜக கோடி விரிக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

பலரும் தேசிய கொடிக்கு பெரும் அவமானம் நிகழ்த்தப்பட்டதாக குற்றம்சாட்டினர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.