மக்கன்லால் சர்க்கார் 
இந்தியா

97 வயது முதியவரின் காலில் விழுந்து பிரதமர் மோடி மரியாதை.. யார் இந்த மக்கன்லால் சர்க்கார்?

இறுதிப் பயணத்தில் மக்கன்லால் சர்க்கார் உடன் இருந்தார் என்று தெரிவித்தார்..

மாலை முரசு செய்தி குழு

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற சுவேந்து அதிகாரியின் பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு நெகிழ்ச்சியான செயலைச் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேடையில் இருந்த 97 வயது முதியவர் ஒருவரை நேரில் சந்தித்து, அவரைக் கட்டித்தழுவி, அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த முதியவர் சிலிகுரியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான மக்கன்லால் சர்க்கார் ஆவார்.

மக்கன்லால் சர்க்கார் என்பவர் சாதாரணமானவர் அல்ல, அவர் கட்சியின் மிக முக்கியமான வரலாற்றுச் சாட்சியாகக் கருதப்படுகிறார். பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரான ஷியாமா பிரசாத் முகர்ஜியின் உதவியாளராகப் பணியாற்றியவர் இவர். இது குறித்துப் பேசிய மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, ஷியாமா பிரசாத் முகர்ஜி காஷ்மீர் சிறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டபோது, அவரது இறுதிப் பயணத்தில் மக்கன்லால் சர்க்கார் உடன் இருந்தார் என்று தெரிவித்தார். கட்சியின் தொடக்கக் காலப் போராட்டங்களில் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், காங்கிரஸ் ஆட்சியில் டெல்லி காவல்துறையினரால் தேசபக்தி பாடல் பாடியதற்காக மக்கன்லால் சர்க்கார் கைது செய்யப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். மாறாக, அதே தேசபக்தி பாடலை நீதிமன்றத்தின் முன்பே பாடித் தனது துணிச்சலை வெளிப்படுத்தினார். இதைப் பார்த்த நீதிபதி, அவருக்கு மன்னிப்பு வழங்கியதோடு மட்டுமல்லாமல், அவர் வீடு திரும்புவதற்கு முதல் வகுப்பு ரயில் டிக்கெட்டும், பயணச் செலவிற்காக 100 ரூபாயும் வழங்கியதாகச் சமிக் பட்டாச்சார்யா பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.