கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கிடையில், காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த மத்திய அரசு விரும்புகிறது.
இதுகுறித்து ஆலோசனை நடத்துவதற்காக, பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று உயர்மட்ட கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான முக்கியமான அரசியல் கட்சிகள் பங்கேற்றன. ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அடங்கிய குப்கர் கூட்டமைப்பு, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கலந்து கொண்டன. கூட்டத்திற்கு பின்னர் குப்கர் கூட்டணி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில், காஷ்மீர் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின்னர் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜம்மு காஷ்மீர் வளர்ச்சிக்கு தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் அடிமட்ட ஜனநாயகத்தை வலிமைபடுத்துவதே நமது நோக்கம் என பதிவுவுட்டுள்ள பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரில் தொகுதி வரையறை பணிகள் விரைவில் நடைபெற வேண்டும் என்றும், அப்போழுதுதான் அங்கு தேர்தல் நடைபெற்று ஜம்மு-காஷ்மீரில் தேர்தெடுக்கப்பட்டு அரசு அமைந்து அது ஜம்மு-காஷ்மீருக்கான வளர்ச்சிப்பாதையை வலிமைபடுத்தும் என்றும் பதிவிட்டுள்ளார்.