2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 78 பேருந்துகளில் துணை ராணுவப்படையினர் சென்றனர். அப்போது புல்வாமா மாவட்டம், அவந்தி போரா பகுதியில் வந்தபோது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி ஒருவர் காரில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை நிரப்பிப் பாதுகாப்புப் படை வீரர்கள் வந்த ஒரு வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திார். இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் புல்வாமா தாக்குதலின் 3 ஆம் ஆண்டு நினைவு இன்று அனுசரிக்கப்படுகிறது. புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் நினைவிடத்தில் ராணுவ பாதுகாப்பு படை வீரர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்நாளில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் சிறந்த சேவையை நினைவு கூறுவதாகவும் அவர்களின் துணிச்சலும் உயர்ந்த தியாகமும் ஒவ்வொரு இந்தியனையும் வலுவான மற்றும் வளமான நாட்டை நோக்கி உழைக்க தூண்டுவதாகவும் பதிவிட்டுள்ளார்.