புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவையொட்டி கச்சத்தீவுக்கு, ராமேஸ்வரத்தில் இருந்து முதல் படகு புறப்பட்டது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அமைந்துள்ள கச்சத்தீவு, ராமேஸ்வரத்திற்கும் மிக அருகே அமைந்துள்ளது. இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் கச்சத்தீவில் அந்தோனியார் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இதனையொட்டி நூற்றுக்கணக்கானோர் படகுகளில் அங்கு சென்று வழிபட்டு வீடு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில், இன்றும் நாளையும் விழா நடைபெறவுள்ளதையடுத்து 72 படகுகளில் 2 ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் கச்சத்தீவுக்கு படையெடுக்கின்றனர். தொடர்ந்து ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து தீவிர சோதனைக்குப்பின், கச்சத்தீவுக்கு முதல் படகு புறப்பட்டது. இந்நிகழ்வை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதையடுத்து பக்தர்கள் அனைவரும் உற்சாகத்துடன் பயணத்தைத் தொடங்கினர்.