இந்தியா

உயிரை பறித்த ”செல்பி” : ஆற்றில் தவறி விழுந்து புதுமண தம்பதி மற்றும் நண்பர் பலி!!

செல்பி எடுத்தபோது ஆற்றில் தவறி விழுந்து புதுமண தம்பதி மற்றும் அவர்களின் நண்பர் உள்ளிட்டோர் உயிரிழந்த சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

Tamil Selvi Selvakumar

பீட் மாவட்டத்தை சேர்ந்தவர் சித்திக் பதான் சேக். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் தான் தாகா சேக் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகளான இவர்கள், நண்பர் சாகாப்புடன் காவத் கிராமத்தில் உள்ள ஆற்றுக்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் 3 பேரும் ஆற்றின் அருகில் நின்று செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.  அப்போது செல்பி எடுக்கும் ஆர்வத்தில் எதிர்பாராதவிதமாக புதுமண தம்பதி ஆற்றில் விழுந்தனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர் சாகாப்பு அவர்களை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் துருதிஷ்டவசமாக அவர்கள் 3 பேரும் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார் மீட்பு படையினரின் உதவியோடு ஆற்றில் மூழ்கிய அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், செல்பி எடுக்க முயன்ற போது புதுமண தம்பதி மற்றும் அவரது நண்பர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.